vendredi 11 mars 2016

பூங்காற்றுத் திரும்புமா?




பூங்காற்றுத் திரும்புமா?

எடுப்பு!

பூங்காற்றுத் திரும்புமா - இனிப்
புதுவாழ்வும் அரும்புமா?
                                                      (பூங்காற்று)

தொடுப்பு

தீங்கெல்லாம் தீருமா - இன்பத்
தேன்வந்து சேருமா?
                                                      (பூங்காற்று)

முடிப்பு

வேண்டாத சாத்திரங்கள் சாயுமா - மனம்
விரும்பாத வேற்றுமைகள் மாயுமா?
தீண்டாமை எனும்கொடுமை ஓயுமா - உயர்
சீரோங்கும் பொதுநலம் பாயுமா?
                                                      (பூங்காற்று)

கல்லாமை இல்லாமற் போகுமா - பெருங்
கருணைமழை கரைபுரள ஏகுமா?
இல்லாமை இல்லாமை காணுமா - வாழ்வும்
இனிதாகும் நல்லறங்கள் பூணுமா?
                                                      (பூங்காற்று)

பெண்ணாசை மனம்விட்டே அழியுமா - காணும்
பெண்ணடிமை நிலம்விட்டே ஒழியுமா?
பொன்னாசை நமைவிட்டே கழியுமா - நம்
பொதுவுடைமை உலகெங்கும் பொழியுமா?
                                                      (பூங்காற்று)
11.02.2016

vendredi 7 août 2015

கம்பன் புகழ்!

கம்பன் புகழ்!

தந்தையின் சொல்லினைத் தன்னுயிர் என்றான்
தனயன் இராமபிரான்! - கூனி
மந்தரை சூழ்ச்சியால் கைகேயி வார்த்தையால்
மன்னவன் காடுறைந்தான்!

அண்ணனும் தம்பியும் அன்பைப் பொழிந்திடும்
அற்புதக் காவியமாம் - அது
கன்னித் தமிழினில் கண்டெனத் தீட்டிய
கம்பனின் ஓவியமாம்!

கருணைக் கடலெனக் காணும் இராமனின்
காலடி கள்சுமந்தான் - உயர்
பரதனைப் போன்றொரு பண்புடைச் சொல்வனைப்
பாவியத் துள்படைத்தான்!

சிற்றன்னை செய்த சிறப்பில்லாச் செய்கையால்
சீர்ராமன் காடடைந்தான் - நாளும்
உற்ற துணையாய் இலக்குவன் நின்றே
உயர்நிலை தானடைந்தான்!

சனகனின் கண்மணி சானகி தேவியின்
சால்பினை என்னென்பேன் - அவள்
கனவிலும் கூடக் கமழும் திருராமன்
காட்சியும் நன்றென்பேன்!

பெருமை இழந்தான் பிறன்மனை நோக்கிப்
பெரியோன் இராவணன்தான் - போற்றும்
அருமைக் கதையை அழகாய்ப் படைத்தான்
அருங்கம்ப நாடனவன்!

அரக்க இனத்தை அனுமனை விட்டே
அழிக்கக் கதைபடைத்தான் - இராமன்
இரக்க மனத்தால், இலங்கையின் வேந்தனை
இன்று போ.... என்றுரைத்தான்!

அசோக வனத்தில் மிதிலையின் செல்வி,தன்
அய்யனை நோக்கிநின்றாள் - அங்கு
விசுவாசத் தோடு திரிசடை என்பாள்
விரும்பிப் பணிபுரிந்தாள்!

காரிருள் தோற்றமும் காலனின் ஆற்றலும்
காணும் நிலத்தவனாம்! - குகன்
பார்புகழ் ராமன்பால் பக்தியை வைத்துப்
படகை விடுத்தவனாம்!

மூத்த மனைவி எனும்பெயர் பெற்றவள்
மூப்பிலாக் கோசலையாள் - அவள்
பூத்த மலராய்ப் பொலியும் இராமனைப்
பூமியில் பெற்றவளாம்!

மாய மிகுமானாய் வந்தவன் மாரீசன்
வாழும் அறமுரைத்தான் - கொடும்
பேயர் அரக்கர் குலத்தில் உதித்தும்
பெருமையால் தானுயர்ந்தான்!

இன்னும் பலரும் இராமக் கதையில்
இருக்க இடங்கொடுத்தான் - கம்பன்
கன்னல் தமிழினில் வண்ணங் கமழக்
களிக்கக் கவிபடைத்தான்!

மானை விரும்பிய மங்கையாம் சீதை
மனைதனைத் தாண்டிவிட்டாள் - இராமன்
தேனாய் இனித்த திருமகள் தேவியைத்
தீயுள் புகவிட்டான்!

செஞ்சோற்றுக் காகச் சிரசையும் தந்தவன்
சீர்மிகு கும்பகர்ணன் - எதற்கும்
அஞ்சாத வீரன்! அறவழி யாளன்!
அவன்புகழ் பாடுவமே!

ஆர்ப்பரித் தாள்அந்தச் சூர்பண கைதான்
அறவழி தான்மறந்தாள் - காம
வார்ப்பட மாகியே மூக்கறு பட்டுமே
வஞ்சகி தான்குலைந்தாள்!

முன்னவ னான இராவணன் செய்கை
முறையில்லை என்றுரைத்தான் - அயோத்தி
மன்னவன் பக்கமே வீடணன் நின்றதால்
மாப்புகழ் தானடைந்தான்!

எல்லாக் கலையிலும் ஏற்ற மடைந்தவன்
ஏந்தல் அனுமன்தான்! - அவனைச்
சொல்லினில் செல்வனாய்த் தோதாய்ப் படைத்தான்
சுடர்மிகு கம்பன்தான்!

தக்க அறவுரை தந்தைக்கு உரைத்தனன்
தன்னுயிர் தந்தனனே - வீரம்
மிக்கதோர் நல்மேக நாதன் புகழை
வியந்துநாம் போற்றுவமே!

அறநெறி யாவும் திருக்குறள் போலே
அழகுறத் தான்பொழிந்தான் - கம்பன்
உறவுகள் யாவும் உயர்அன்பி னாலே
ஒழுகிடத் தான்மொழிந்தான்!

கற்பனை யோடும் பொருட்சுவை யோடும்
கவிநயம் கண்டிடலாம்! - கம்பன்
நற்றமிழ்த் தேனாம் நனிமிகு பாக்கள்
நலம்பெற உண்டிடலாம்!

கம்பனைப் போலொரு கற்பனை கொஞ்சிடும்
காப்பியம் தந்தவர்யார்? - அதில்
பம்பும் உவமைகள் பாங்காய்ப் படத்திடப்
பாக்கள் படைத்தவர்யார்?

கம்பன் புகழினைக் கண்டங்கள் தாண்டியே
காணும் இனியவிழா - இங்கு
நம்மின் தமிழர்கள் நற்றமிழ் போற்றவே
நாடும் இராமன்விழா!

செந்தமிழ் ஒன்றையே சிந்தையில் கொண்டிடும்
சீரிய அன்பர்களே - பிழைக்க
வந்த இடத்திலும் வண்டமிழ் போற்றினீர்
வாயார வாழ்த்துகிறேன்!

samedi 14 février 2015

கவிஞர் பாரதியே!



கவிஞர் கி. பாரதிதாசனின் “சொல்லோவியம்”  
கவிதை நுாலுக்குச் சாற்று கவி

நல்ல நல்ல எதுகைகளும்
     நலஞ்சேர் வண்ணம் மோனைகளும்
வல்ல வளஞ்சேர் இயைபுகளும்
     வளமாய்ப் பெற்றுப் பாவொளிரும்
சொல்லோ வியத்தைக் கண்டுவந்தேன்
     சொற்கள் யாவும் கற்கண்டாம்!
வெல்லும் தமிழால் விருந்தளிக்கும்
     வியனார் கவிஞர் பாரதியே!

கண்ணும் கண்ணும் பேசுவதைக்
     காதற் காற்று வீசுவதைக்
கண்ணி கள்தாம் கற்பவரின்
     கருத்தைக் கவர்ந்து கமழுவதை
எண்ணி யெண்ணி வியக்கின்றேன்!
     இளமை இனிமை காண்கின்றேன்!
மண்ணின் மாண்பை மகிழ்ந்தேத்தும்
     வளமார் கவிஞர் பாரதியே!

சென்ற விடத்தும் செந்தமிழின்
     சீரைச் சொல்லி வருகின்றாய்!
நன்றாம் காதல் கவிதைகளை
     நல்ல தமிழில் தருகின்றாய்!
உன்றன் பாக்கள் ஒவ்வொன்றும்
     உயர்ந்த சுவையாம் நல்லமுதே!
என்றும் வாழ்வில் தமிழ்ப்பணியை
     ஏந்தும் கவஞர் பாரதியே!

13.02.2015

mardi 1 avril 2014

கவிதைக் காவலன்!





கவிதைக் காவலன் 

எடுப்பு

கன்னல் கவிவடித்த கண்ண தாசனே - உயர்
கற்பனைக் கடல்குளித்த கம்ப நேசனே!
                                         (கன்னல்)

தொடுப்பு

வண்ணம் பலதொடுத்த கவிதை மன்னனே - நல்ல
பண்ணில் மதுகலந்த காதல் கண்ணனே!
                                         (கன்னல்)

முடிப்பு

ஒப்பிலாத் திரையிசையில் ஒளிர்ந்தவன்..நீ - கவி
ஓதுவார் உள்ளத்துள் பொலிந்தவன் ..நீ!
தப்பிலாக் குறள்விளக்கம் மொழிந்தவன்..நீ - இங்குத்
தண்டமிழ் அமுதினையே பொழிந்தவன்..நீ!
                                         (கன்னல்)

காதல்தரும் இசையினிலே கமழ்ந்தவன்..நீ - கற்
கண்டெனக் கவியெழுதி மகிழ்ந்தவன்..நீ!
போதைதரும் சீர்களையே புனைந்தவன்..நீ - நாளும்
பொன்மழைத் தமிழினிலே நனைந்தவன்..நீ!
                                         (கன்னல்)
01.04.2014